இன்று உலகின் சுற்று சூழல் எவ்வளவு மாசு பட்டிருக்கிறதோ அதை விட  பல மடங்கு அவ்வுலகில் வாழும் மக்களின் மனங்களும் மாசு பட்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. நேர்மை என்பது அகராதியில் மட்டுமே பார்க்கக் கூடிய வார்த்தை ஆகிப் போனது. கடை பிடிக்க ஆளில்லை என்பது நிஜம். தப்பி தவறி ஓரிருவர் நேர்மையாக இருந்தால்  இவ்வுலகம் அவர்களை ஏமாளிகள் என்றும்  கோமாளிகள் என்றும் முத்திரை குத்தி விடுகின்றது.  நேர்மையானவர்கள் இன்று உண்மையில் இவ்வுலகில் இருக்கின்றார்களா? மேலே படியுங்கள்.....




போன நூற்றாண்டு வரை ஓரளவுக்கு மக்கள்  நீதி நேர்மைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாழ்ந்திருந்தார்கள். பணம் வாழ்வின் பிரதானம் ஆகத்  தொடங்கிய பின் நேர்மை பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது என்பது உண்மை தான். காமராஜரைப் போன்ற நேர்மையான அரசியல்வாதிகளை இன்று பார்க்க முடியுமா?

பெரிய வியாபர நிறுவனங்களே இன்று நேர்மையின்றி செயல் படுவதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். சிறிய வியாபாரிகளும் நாங்கள் அவர்களுக்கு சளைத்தவர்களில்லை என்று போட்டி போட்டுக் கொண்டு நேர்மையை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

உறவுகளிலும் நேர்மை குறைந்து வருகின்றது. கணவன் மனைவியிடையே கூட நேர்மை என்பது அரிதாகி கொண்டு வருகின்றது என்பது தான் கொடுமை. எங்கே போய்க்  கொண்டிருக்கிறது இந்த உலகம்? இனி நேர்மையான மக்களைப் பார்க்கவே முடியாதா?

எல்லாமே ஒரு சுழற்சி முறையில் தான் இவ்வுலகில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலிருப்பவன் கீழே செல்லுவதும், கீழே இருப்பவன் மேலே செல்லுவதும் விதி. கொடுங்கோன்மையின் உச்சக் கட்டத்தில் புரட்சி வெடிக்கும். ஊழலும் ஒரு நாள் நம் நாட்டிலிருந்து அப்புறப் படுத்தப் படும். மீண்டும் நேர்மை இவ்வுலகை ஆட்சி செய்யும். இதெல்லாம் நிச்சயம் நடக்கும்.  இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் எவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்பது தான் நம் முன்னே நிற்கும் பெரிய கேள்விக் குறி ஆகும். நம் தலை முறையிலேயே நடந்து விட்டால் நாம் பாக்கியசாலிகள் ஆவோம். நடக்குமா? நம்பிக்கை  தான் வாழ்க்கை.

வாழ்க வளமுடன்!

திருமணம் செய்யாமல் வாழ முடியாதா?

உங்கள் விதியின் 5 விதிகள் 




                                                                            

Post a Comment

 
Top