வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி 5-7-2015 ஆம் அன்று குரு கடகத்திலிருந்து பெயர்ந்து சிம்மத்திற்கு சென்று விட்டார். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி குரு 15-7-2015 ஆம் அன்று கடகத்திலிருந்து பெயர்ந்து சிம்மத்திற்கு சென்று விட்டார். குரு மட்டுமே  9  கிரகங்களில் முழு சுபர்.  அதாவது, சுபாவத்தில் குருவை விட நல்ல கிரகம் வேறு எதுவும் இல்லை என்பதாகும். பொதுவாக குரு நின்ற இடத்தை விட அது பார்த்த இடங்களுக்குத் தான் நன்மைகள் அதிகம் நடக்கும் என்பது ஜோதிட விதி ஆகும். 'குரு பார்த்தால் கோடி நன்மைகள் நடக்கும்' என்பார்கள். ராசி பலன் பார்க்கும் போது லக்னத்தை கணக்கில் கொள்வதில்லை.  ஜன்ம ராசியை வைத்தே ராசி பலன்கள் கூறப் படுகின்றன. குரு பெயர்ச்சியைப் பொறுத்தமட்டில் குரு உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் நல்ல அல்லது தீய பலன்கள் கணிக்கப் படுகின்றன. கோட்சார பலன்கள் பார்க்கும் போது குரு நின்ற ராசியை வைத்தே பலன்கள் நிச்சயிக்கப் படுகின்றன.
அதாவது குரு பெயர்ச்சி உங்கள் ராசியைப் பொறுத்து நன்மை அல்லது தீமையை செய்யும். உங்கள் ராசி என்ன? குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யுமா? மேலே படியுங்கள்....



குரு கிரகம் ஒரு ராசியில் சுமார் 1 வருடம் இருப்பார். பின் அவர் அடுத்த ராசிக்கு செல்வதையே நாம் குரு பெயர்ச்சி என்கிறோம். அதாவது கோட்சாரத்தில் குரு ஒரு ராசியிலிருந்து பெயர்ந்து அடுத்த ராசிக்கு செல்வதையே நாம் குரு பெயர்ச்சி என்கிறோம். 

குரு கோட்சாரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில்  உங்களுக்கு நன்மைகளை தருவார் என்பது விதி. ஏனைய ராசிகளான 1, 3,4,6,8,10,12 ஆகிய  இடங்களில் குரு  கெடு பலன்களையே கொடுப்பார்.

இந்த குரு பெயர்ச்சி கடகம், மேஷம், கும்பம், தனுசு, துலாம் ராசிகளுக்கு நன்மையை இந்த ஒரு வருடம் செய்வார். குரு நல்ல இடங்களில்  இருந்தால் என்னென்ன நன்மைகள் விளையும்?  பண விஷயத்தில் ஏற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் இருந்தால் அவர்கள் நன்மைகள் அடைவார்கள். மேலும்
 அவர்களால் நீங்கள் நன்மைகள் அடைவீர்கள். ஆலயங்களுக்கு போகும் யோகம் உண்டு. தெய்வப் பணிகளுக்கு  பணம் செலவழிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு குரு பலம் ஏற்படுவதால் திருமணம் நடக்கும்.  கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். பேரும் புகழும் ஏற்படும். நினைத்த காரியங்கள் கைகூடும். 

ஏனைய ராசிகளான ரிஷபம்,  மிதுனம்,சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம் மீனம் ஆகிய ராசிகளுக்கு இதற்கு எதிரான பலன்களே  ஏற்படும். ஆனால் பயப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு  இப்பொழுது நடப்பு தசை அதிர்ஷ்கரமான தசையாக இருந்தால் பெரும்பாலும் நல்ல பலன்களே ஏற்படும் எனலாம்.

குரு பெயர்ச்சி அனுகூலம் இல்லாதவர்கள் குருவுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்? குருவின் கோவில்களுக்கு செல்லலாம். அங்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யலாம். தீபமிடலாம். தஷிணாமூர்த்தியை வழிபடலாம். குருவிற்கான ஸ்லோகங்களை, மந்திரங்களை அனுதினமும் சொல்லலாம். பிராமணர்களுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் தானமளிப்பதும் நன்மைகள் ஏற்பட வழி வகுக்கும் எனலாம்.

குரு பகவானின் அனுகூலம் பெற்று நீங்கள் எல்லோரும் நன்மைகள் பலவும் பெற வாழ்த்தி முடிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

செவ்வாய் கிரகமும் வீடு கட்டும் யோகமும் 

15 எளிய வாஸ்து பரிகாரங்கள் 



Post a Comment

 
Top